தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய காவலர்கள் 17 பேர் மற்றும் ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது.
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இரு முக்கிய விசாரணை ஆணையங்களின் அறிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
அதன்படி, பேரணி நடத்திய மக்களின் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு குறித்தும் அதற்கு பிந்தைய நிகழ்வுகள் குறித்தும் விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்ட, நீதியரசர் அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தால் அளிக்கப்பட்ட அறிக்கை குறித்து அமைச்சரவை விரிவாக விவாதித்தது.
இதில், இந்திய காவல் பணி அலுவலர்கள் உள்ளிட்ட 17 காவல்துறையினர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட 4 அலுவலர்கள் மீது தேவையான துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கான விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகள், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு அவை துறைகளின் பரிசீலனையில் உள்ளதை அமைச்சரவை கவனத்தில் கொண்டது.
இது குறித்து தகுந்த நடவடிக்கை மேற்கொண்ட பின்னர், அதற்கான விபர அறிக்கையுடன், ஆணையத்தின் இறுதி அறிக்கையை தமிழ்நாடு சட்டப்பேரவையில் வைப்பதற்கு அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.
இதேபோன்று, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணையம், சசிகலா, சி.விஜயபாஸ்கர், ராமமோகன ராவ் உள்ளிட்டோர் மீது அரசு விசாரணைக்கு உத்தரவிட ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
இந்த பரிந்துரை தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கவும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. நடவடிக்கை எடுத்ததற்கான விவர அறிக்கையுடன் ஆணையத்தின் அறிக்கையும் சட்டப்பேரவையில் வைக்க ஆலோசனையில் முடிவு செய்யப்பட்டது.