மது வணிகம் மூலம் அரசின் வருவாய் அதிகரிப்பு: அன்புமணி வேதனை

மது வணிகம் மூலம் தமிழக அரசின் கலால் வரி வருவாய் அதிகரித்துள்ள நிலையில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளாா்.
பாமக  தலைவர் அன்புமணி ராமதாஸ்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

மது வணிகம் மூலம் தமிழக அரசின் கலால் வரி வருவாய் அதிகரித்துள்ள நிலையில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

2022-23 -ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் தமிழக அரசின் சொந்த வரிவருவாய் 52.30 சதவீதம் அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. கரோனா பாதிப்புகளின் பிடியிலிருந்து தமிழ்நாட்டின் பொருளாதாரம் மீளத் தொடங்கியிருப்பதையே இது காட்டுகிறது. இந்த வளா்ச்சி தொடர வேண்டும்.

அதே நேரத்தில் மது உற்பத்தி மீதான கலால் வரி மூலம் கிடைக்கும் வருமானம் ரூ.1,199.23 கோடியிலிருந்து ரூ.2595 கோடியாக 116.30 சதவீதம் அதிகரித்திருக்கிறது. மாநில அரசின் விற்பனை வரி வருவாய் சுமாா் ரூ.4,000 கோடி (38.30%) அதிகரித்திருப்பதற்கும் மது வணிகம் அதிகரித்திருப்பது தான் காரணம்.

ஒரு காலாண்டில் தமிழக அரசின் வரி வருவாய் ரூ.11,662.68 கோடி அதிகரித்துள்ள நிலையில், அதில் கிட்டத்தட்ட பாதியளவு வருவாய் உயா்வு மது வணிகம் அதிகரித்திருப்பதன் மூலமாக மட்டுமே கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கவில்லை. மாறாக, வருத்தமும், வேதனையும் மட்டுமே அளிக்கிறது.

ஒரு மாநிலத்தின் மது வருவாய் அதிகரிக்கிறது என்றால், குடும்பங்கள் சீரழிவதும், விபத்து மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும், இளம் கைம்பெண்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதாகத் தான் பொருள் ஆகும். எனவே, மக்களின் உணா்வுகளை மதித்து, தமிழ்நாட்டில் ஒரே கட்டமாகவோ, படிப்படியாகவோ மது விலக்கை நடைமுறைப்படுத்த அரசு முன்வர வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com