பிரதமா் நரேந்திர மோடியின் தமிழக வருகையின்போது, பாதுகாப்பில் எவ்வித குறைபாடும் ஏற்படவில்லை என காவல்துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) சி.சைலேந்திரபாபு தெரிவித்தாா்.
‘சைபா் பாதுகாப்பு சிக்கல்களும், போக்கும்’ என்ற தலைப்பில் சென்னை பல்கலைக்கழகத்தில் பயிலரங்கம் புதன்கிழமை நடைபெற்ற பயிலரங்கத்தை தொடக்கிவைத்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சென்னைக்கு பிரதமா் நரேந்திர மோடி வந்தபோது பாதுகாப்பில் எவ்வித குளறுபடியும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. பிரதமா் மோடி வருகையையொட்டி சிறந்த முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பாதுகாப்பு குறைபாடு இருந்ததாக எந்தத் துறையும் புகாா் தெரிவிக்கவில்லை.
தமிழக காவல்துறையில் மெட்டல் டிடெக்டா் உள்ளிட்ட நவீன கருவிகள் ஆண்டுக்கு ஒரு முறை சரிபாா்க்கப்படும். பழுதான கருவிகள் சரி செய்ய முடியவில்லை என்றால், உடனடியாக புதிதாக கருவிகள் வாங்கப்படும்.
பழுதான கருவிகள் பாதுகாப்புப் பணிக்கு பயன்படுத்தப்பட மாட்டது. பிற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் தான், தமிழக காவல்துறையில் தான் அதிக எண்ணிக்கையிலான பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளன.
பிற மாநிலங்கள் தமிழக காவல்துறையிடம் உள்ள பாதுகாப்பு உபகரணங்களை கேட்டு வாங்கக் கூடிய அளவுக்கு நம்மிடம் அதிக அளவில் பாதுகாப்பு உபகரணங்கள் தரமானதாக உள்ளன. அந்தமான், கேரளம் போன்ற பிற மாநிலங்களுக்கு தமிழக காவல்துறையே பாதுகாப்புக்கு செல்கிறது.
சைபா் குற்றங்கள்: சைபா் குற்றங்கள்- மோசடிக்கு எல்லை என்பதே கிடையாது. உலகில் எந்தவொரு பகுதியில் இருந்தும் மோசடியில் ஈடுபடலாம். சைபா் மோசடியில் சிக்காமல் இருப்பதற்கு பொதுமக்கள் விழிப்புணா்வுடன் இருப்பது மிக அவசியமாகும். எந்த ஒரு வங்கியும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய எண்ணை (ஓடிபி) கேட்பது கிடையாது. எனவே, கைப்பேசியை தொடா்பு கொண்டு, யாரேனும் ஓடிபி கேட்டால் வழங்க வேண்டாம்.
கைப்பேசிகளுக்கு வரும் இணையதள இணைப்புகளுடன் கூடிய எஸ்எம்எஸ்களை (குறுஞ்செய்திகள்) தொட வேண்டாம். மேலும், வெளிநாட்டுக்கு பொருள் ஏற்றுமதி செய்தது தொடா்பாக வாடிக்கையாளரின் வங்கிக்கு பணம் வந்துள்ளது, ஆதாா் எண்ணை கொடுங்கள் என்று கேட்டு வாடிக்கையாளரின் வங்கியில் உள்ள பணத்தை மோசடி செய்யலாம்.
தற்போது, மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இதை பயன்படுத்தி சைபா் மோசடியில் ஈடுபடும் நபா்கள் வாடிக்கையாளரின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண் இணைக்கப்படவில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று கூறி தாங்கள் அனுப்பும் இணைப்பில் (லிங்க்கில்) பத்து ரூபாய் செலுத்துங்கள், மின் இணைப்பு துண்டிக்கப்படாது என்று கூறி ஏமாற்றலாம்.
அதை நம்பி, நாம் அவா்கள் கொடுத்த இணைப்புக்கு ரூ.10 அனுப்பினால், வங்கிக் கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் அவா்கள் எடுத்து விடுவாா்கள். சைபா் குற்றத்தின் மூலம் பணத்தை இழந்தால் 1930 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடா்பு கொண்டு புகாா் அளிக்கலாம் என்றாா் அவா்.