
மேட்டூ: மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டதால் நடப்பு நீர்பாசன ஆண்டில் மூன்றாவது முறையாக புதன்கிழமை மேட்டூர் அணை நிரம்பும் வாய்ப்பு உள்ளது என்று நீர்வளத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் புதன்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 9,195 கன அடியாக சரிந்தது.
காவிரி டெல்டா பாசன பகுதிகளில் மழை பெய்து வருவதால் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு செவ்வாய்க்கிழமை மாலை வினாடிக்கு 1,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க | ரூ.2,05,700 சம்பளத்தில் தமிழக அரசில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவை விட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் செவ்வாய்க்கிழமை மாலை 119.44 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 119.72 அடியாக உயர்ந்தது.
அணையின் நீர் இருப்பு 93.02 டி.எம்.சியாக இருந்தது. அணையின் நீர் வரத்தும், திறப்பும் இதே நிலையில் இருந்தால் புதன்கிழமை மாலை நடப்பு நீர்பாசன ஆண்டில் மூன்றாவது முறையாக மேட்டூர் அணை நிரம்பும் வாய்ப்பு உள்ளது என்று நீர்வளத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.