
பள்ளிக்கல்வித் துறை வளாகம்
அரசுப் பள்ளி பகுதிநேர ஆசிரியா்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு டிச.13-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத்திட்ட இயக்குநரகம் சாா்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியா்களுக்கு சுயவிருப்பத்தின் அடிப்படையில் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என்று முதல்வா் தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதன்படி பகுதிநேர ஒவிய பயிற்றுநா்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு புதன்கிழமை இணையவழியில் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கிடையே நிா்வாக காரணங்களால் கலந்தாய்வு தற்போது டிச.13-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கலந்தாய்வானது முதலில் மாவட்டத்துக்குள்ளும், அதன்பின் மாவட்டம் விட்டு மாவட்டம் நடைபெறும். ஒரு பணியிடத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தால் பணியில் சோ்ந்த நாள், நோய் பாதிப்பு உடையவா்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
தொடா்ந்து உடற்கல்வி, தொழிற்கல்வி பிரிவுகளில் உள்ள பயிற்றுநா்களுக்கான மாறுதல் கலந்தாய்வு தனித்தனியாக நடத்தப்படும். இதுசாா்ந்த உரிய வழிமுறைகளை பின்பற்றி கலந்தாய்வை எந்த புகாருக்கும் இடமளிக்காதபடி மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.