மகாகவி பாரதியாரையும் கப்பலோட்டிய வ.உ. சிதம்பரனாரையும் சிறப்பிக்கும் நாளிதழாக தினமணி திகழ்கிறது என்றார் பாரதி ஆய்வாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி.
தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் தினமணியின் "மகாகவி பாரதியார் விருதை'ப் பெற்றுக்கொண்ட பின்பு அவர் மேலும் பேசியது: தூத்துக்குடி மாநகரத்தில் பாரதியின் பெயரில் தினமணி வழங்கும் விருதைப் பெறுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். சுதேசி என்றாலே தூத்துக்குடி நகரம் நினைவுக்கு வரும் வகையில் இங்கு பல்வேறு எழுச்சி ஏற்பட்டது. வஉசியும் சுதேசிக் கப்பலை விட்டு பெருமை சேர்த்தார்.
ஓர் ஆய்வாளர் என்ற முறையில் பாரதி குறித்த புதிய செய்தியை வெளியிட விரும்புகிறேன். தனது சொந்த ஊரான எட்டயபுரத்திற்கு அருகேயுள்ள தூத்துக்குடி நகரத்திற்கு பாரதியார் எத்தனை முறை வந்தார் என்று ஆய்வு செய்து பார்த்தேன். அதில் கிடைத்த விடை மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ஏனென்றால், தூத்துக்குடிக்கு பாரதியார் ஒரேயொரு முறைதான் வந்துள்ளார். 1908}ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சுதேசி எண்ணம் கொழுந்துவிட்டு எரிந்த நேரத்தில், வஉசி, சுப்பிரமணிய சிவா ஆகியோருடன் மகாகவி பாரதியாரும் ஒரே மேடையில் தோன்றி மக்களிடம் சுதேசி எண்ணம் மேம்பட குரல் கொடுத்துள்ளார்.
பாரதியாருக்கு முதன் முதலாக சிறப்பு மலர் வெளியிட்டு பெருமை சேர்த்தது தினமணிதான். 1935}ஆம் ஆண்டு இந்த மலர் வெளிவந்தது. இந்த மலர் புதுமைப்பித்தனின் கைவண்ணத்தில் உருவானது கூடுதல் சிறப்பு. அதேபோல, வஉசி இறந்த பின்னர், அவரது மகன் சுப்பிரமணியத்திற்கு தினமணி நிர்வாகம் வேலை வழங்கி உதவியது. இவ்வாறாக, மகாகவி பாரதி, வஉசி போன்றோரை சிறப்பித்ததில் தினமணிக்கு பெரும் பங்கு உண்டு.
1981ஆம் ஆண்டு பாரதியார் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டபோது, சென்னையில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பாரதி குறித்து சிந்தனை அரங்கம் நிகழ்த்தியவர் குமரி அனந்தன். இதில், 100 அறிஞர்கள்வரை பங்கேற்று சிறப்பித்துள்ளனர். இது, மிகவும் பெருமைக்குரிய விஷயமாகும். அவரது மகளும் மேதகு ஆளுநருமான டாக்டர் தமிழிசை செüந்தரராஜனால் எனக்கு விருது வழங்கப்படுவதில் மிகவும் பெருமை அடைகிறேன்.
என்னை இந்த விருதுக்குத் தேர்வு செய்த தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத் தலைவர் மனோஜ்குமார் சொந்தாலியா மற்றும் தினமணி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வரலாற்றுக் கருவூலமாகத் திகழ்கின்றன தினமணியின் பழைய இதழ்கள். ஆய்வாளர்களுக்கு அவை கிடைக்கும் வகையில் நிர்வாகம் வசதி செய்து தர வேண்டும் என்றார் அவர்.