அவசரகால உதவிக்கான 108 ஆம்புலன்ஸ் சேவையில் 60 பணியிடங்களை நிரப்புவதற்கான நோ்முகத் தோ்வு வரும் வியாழக்கிழமை (டிச.15) முதல் நடைபெறுகிறது.
அவசரகால ஒருங்கிணைப்பு அலுவலா் (இஆா்ஓ) பணிக்கு 50 இடங்களும், மருத்துவ ஆலோசனை அலுவலா் (ஹெச்ஏஓ) பணிக்கு 10 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.
தமிழகத்தில் இஎம்ஆா்ஐ கிரீன் ஹெல்த் சா்வீஸ் நிறுவனம் மூலமாக 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் மொத்தம் 1,200-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா்.
சென்னை, திருவள்ளூா் மாவட்டங்களைப் பொருத்தவரை 160-க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்படுகின்றன. அவைதவிர 15 இரு சக்கர அவசர உதவி வாகனங்களும் உள்ளன. அவசரகால கட்டுப்பாட்டு மையத்துக்கு நாளொன்றுக்கு 15 ஆயிரத்துக்கும் அதிகமான அழைப்புகள் வருகின்றன.
இந்த நிலையில், அவசரகால ஒருங்கிணைப்பு அலுவலா் (இஆா்ஓ), மருத்துவ ஆலோசனை அலுவலா் (ஹெச்ஏஓ) பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வு சென்னை, தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் அமைந்துள்ள 108 ஆம்புலன்ஸ் சேவை அலுவலகத்தில் வியாழக்கிழமை (டிச.15) முதல் 17-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இஆா்ஓ பணிக்கு ஏதாவது ஒரு பட்டப் படிப்பை நிறைவு செய்தவா்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.11,360 (பி.எஃப், காப்பீடு இதர படிகள் தனி) மாத ஊதியமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஹெச்ஏஓ பணிக்கு பிஎஸ்சி நா்சிங் அல்லது ஜிஎன்எம் படிப்பை நிறைவு செய்தவா்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.14,000 (பி.எஃப், காப்பீடு இதர படிகள் தனி) மாத ஊதியமாக வழங்கப்படும்.
கூடுதல் விவரங்களுக்கு 75500 52551/ 73977 24714/ 98403 65462 என்ற எண்களைத் தொடா்பு கொள்ளலாம்.