சுருளி அருவியில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை
கம்பம்: தேனி மாவட்டம் சுருளி அருவியில் இரண்டாவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை மற்றும் மாண்டஸ் புயல் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக சுருளி அருவியின் நீர்வரத்து பகுதிகளான அரிசி பாறை, ஈத்தைப்பாறை பகுதி ஓடைகளில் நீர்வரத்து அதிகமாகி, அருவியில் வெள்ளப்பெருக்கு தொடர்ந்தது.
முதல் நாளான புதன்கிழமை குளிக்கத் தடை விதித்த நிலையில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தினர் குளிக்கத் தடை விதித்தனர்.
அருவி பகுதிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தர்கள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். சிலர் சுருளி ஆற்றில் குளித்துச் சென்றனர்.
அருவியில் வெள்ளப்பெருக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவ வனத்துறையினர் தெரிவித்தனர்.