தமிழ்நாடு அமைச்சரவையில் புதிதாக இணைந்துள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
இதையும் படிக்க | 13 ஆண்டுகளுக்குப் பின் இணையும் ஆதி - அறிவழகன் கூட்டணி!
அவருக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு அமைச்சரவையில் புதிதாக இணைந்துள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தனது வாழ்த்து செய்தியை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் அவர், “மாண்புமிகு அமைச்சர் உதயநிதி அவர்களே. நீங்கள் பதவியேற்கும் நாளில் உங்களை வாழ்த்துவதில் எனக்கு மகழ்ச்சி தருகிறது. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனை சான்றோன் எனக் கேட்ட தாய் என்று வள்ளுவர் சொன்னதைப் போல் அம்மாவுக்குதான் நீங்கள் பதவியேற்பது சந்தோஷமாக இருக்கும். இது நிஜமாகும்போது உங்கள் அம்மாவுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என்பதை நான் நினைத்துப் பார்க்கிறேன்.
இதையும் படிக்க | 10 கோடி பார்வைகளைக் கடந்தது ‘பத்தல பத்தல’ பாடல்
அமைச்சர் பதவியை ஏற்கும்போது பொறுப்பு அதிகமாகிறது. இந்த அமைச்சர் பொறுப்பை சரிவர நிறைவேற்றி மக்களிடம் நல்ல பெயரும், புகழும் அடைய வேண்டும் என்பது எனது விருப்பம். அதனை நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.