மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை மார்கழி அஷ்டமி சப்பர விழா நடைபெற்றது.
உலக ஜீவராசிகளுக்கு சிவபெருமான் படியளந்த நாளாகக் கருதப்படும் மார்கழி மாதத்தில் வரும் அஷ்டமி நாளை முன்னிட்டு கோயில் முன் மண்டபத்தில் ரிஷப வாகனத்தில் பிரியாவிடை சமேதமாய் சோமநாதர் சுவாமியும் மற்றொரு ரிஷப வாகனத்தில் ஆனந்தவல்லி அம்மனும் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினர்.
பின்னர் ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்று முடிந்து பெரிய சப்பரத் தேரில் சோமநாதர் சுவாமியும் சிறிய சப்பரத்தில் ஆனந்தவல்லி அம்மனும் எழுந்தருளி அருள்பாலித்தனர்.
அதன் பின்னர் தீபாராதனை நடைபெற்று கைலாய வாத்தியங்கள், மேளதாளங்கள் முழங்க இரு சப்பரங்களும் புறப்பட்டு கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் பவனி வந்தன. வீதிகளில் பக்தர்கள் சோமநாதர் சுவாமியையும் ஆனந்தவல்லி அம்மனையும் வரவேற்று பூஜைகள் நடத்தி தரிசனம் செய்தனர்.
ஏராளமான பக்தர்கள் சப்பரத்திற்கு முன்னும் பின்னும் அரிசிகளை தூவிச் சென்றனர். கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் இரு சப்பரத்தேர்களும் பவனி வந்து நிலை சேர்ந்தன.
அஷ்டமி சப்பர விழாவிற்கான பூஜைகளை தெய்வசிகாமணி என்ற சர்க்கரைப் பட்டர், ராஜேஷ் பட்டர், சோமாஸ் கந்தன் பட்டர், குமார் பட்டர்ஆகியோர் நடத்தி வைத்தனர். அஷ்டமி சப்பர விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.