ஆன்லைன் சூதாட்டம்: தமிழகத்தில் ஒவ்வொரு பொழுதும் ஓர் உயிர் பலியுடன் தான் விடிகிறது - அன்புமணி வேதனை!

ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழகத்தில் ஒவ்வொரு பொழுதும் ஓர் உயிர் பலியுடன் தான் விடிகிறது என்று பாமக நிறுவனரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி வேதனை தெரிவித்துள்ளார். 
ஆன்லைன் சூதாட்டம்: தமிழகத்தில் ஒவ்வொரு பொழுதும் ஓர் உயிர் பலியுடன் தான் விடிகிறது - அன்புமணி வேதனை!

ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழகத்தில் ஒவ்வொரு பொழுதும் ஓர் உயிர் பலியுடன் தான் விடிகிறது என்று பாமக நிறுவனரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி வேதனை தெரிவித்துள்ளார். 

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த வினோத் குமார் என்ற மூன்றாம் ஆண்டு கல்லூரி மாணவர் விரக்தியில் விடுதி அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

இதுக்குறித்து  பாமக தலைவர் அன்புமணி தனது ட்விட்டர் பக்க பதிவில், "ஆன்லைன் சூதாட்டம் என்ற கொடிய அரக்கனின் கோரத் தாண்டவத்தால் தமிழகத்தில் ஒவ்வொரு பொழுதும் ஓர் உயிர் பலியுடன் தான் விடிகிறது. மதுரை திருமங்கலம் அருகே பொறியியல் கல்லூரியில் படித்து வந்த வினோத்குமார் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

வினோத்குமார் டென்னிஸ் வீரர். அவரது குடும்பமும் அவரது கனவுகளை நிறைவேற்ற துணை நின்றது. ஆனால், ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி பணத்தை இழந்ததால் வினோத்குமார் தற்கொலை செய்து கொண்டார். சாதிக்க வேண்டியவர்களை சாகடித்துக் கொண்டிருக்கிறது ஆன்லைன் ரம்மி.

ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டியது தான் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனாலும் அது இன்னும் தடை செய்யப்படாததால் ஒன்றரை ஆண்டுகளில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். அவசர சட்டம் காலாவதியான பின்னர் 16 நாள்களில் 6 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளை தடுக்க வேண்டிய கடமை அரசுக்கு எந்த அளவுக்கு உள்ளதோ, அதே அளவுக்கு  அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைக்க வேண்டிய கடமை ஆளுநருக்கும் இருக்கிறது.  அதை உணராமல் தற்கொலைகளை ஆளுநர் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கிறது.

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி விட்டதுடன் கடமை முடிந்து விட்டதாக நினைத்து அரசு அமைதியாக வேடிக்கை பார்க்கக் கூடாது. ஆளுநரின் ஒப்புதலை பெறுவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும். அதற்கு ஆதரவளிக்க பாமக தயாராக இருக்கிறது என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com