கம்பம்: தேனி மாவட்டம் சுருளி அருவியில் 2-வது நாளாக, செவ்வாய்கிழமையும் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக உள்ளது. திங்கள்கிழமை காலையில் ஐயப்ப பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் குளித்தனர், மதியத்திற்கு மேல் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, இதனால் அருவியில் குளித்துக்கொண்டிருந்த ஐயப்ப பக்தர்களை அங்கு கண்காணிப்பில் ஈடுபட்ட புலிகள் காப்பகத்தினர் வெளியேற்றினர்.
இந்நிலையில் 2 ஆவது நாளாக, செவ்வாய்க்கிழமை காலையில் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் அருவியில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென சுருளி அருவியின் நீர்வரத்து பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியது. உடனே அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட வனத்துறையினர் ஐயப்ப பக்தர்கள், சுற்றுலாப் பயணிகளை வெளியேற்றினர்.
இதுபற்றி கம்பம் கிழக்கு வனச்சரகர் பிச்சைமணி கூறுகையில், தற்போது தொடர் மழை பெய்து வருகிறது. நீர்வரத்து குறைந்ததால் ஐயப்ப பக்தர்கள், சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் குளித்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு, இரண்டாவது நாளாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. அருவியின் நீர் வரத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. வெள்ளப் பெருக்கு குறைந்ததும், குளிக்க அனுமதிக்கப்படுவர், பாதுகாப்புப் பணியில் வன ஊழியர்கள் உள்ளனர்.