மாநகர போக்குவரத்து கழகப் பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்புக்காக தற்போது சிறப்பு வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆண்கள் தவறான கண்ணோட்டத்தில் உரசினால் பெண்கள் பேருந்தில் உள்ள அவசர பொத்தானை அழுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தான் பயணம் செய்ய விரும்பும் பேருந்து எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறது, அடுத்தப் பேருந்து எப்போது வரும் என்பதை அறிய 'சலோ' செயலி சமீபத்தில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து தற்போது பெண்கள் பாதுகாப்புக்கான வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கல்வி நிலையங்கள், அலுவலகங்களுக்குச் செல்லும், பெண்களின் பாதுகாப்பு கருதி, சென்னையில் இயங்கும் சுமார் 1,200 மாநகரப் பேருந்துகளில் அவசர பட்டன்கள் பொருத்தப்பட்டுள்ளது.
பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்கள் தங்களை உரசினாலோ, பாலியல் தொல்லை கொடுத்தாலோ இந்த அவசர பொத்தானை அழுத்தலாம். அதன் மூலம் அந்த நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களிலும், பஸ்களிலும் மகளிர் பயணிகளுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தலை தடுக்கும் வகையில் சென்னை மாநகராட்சியுடன், மாநகர போக்குவரத்து கழகமும் இணைந்து நாளையும் விழிப்புணர்வு பிரசாரங்கள் நடைபெறவுள்ளது.