சீர்காழி: அதிமுக வேட்பாளர் அஞ்சலி தேவி கோயிலில் வைத்து வாக்குறுதி அளித்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
நகர்மன்ற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ள நிலையில் நேற்றுவரை 101 வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் சீர்காழி நகராட்சிக்குள்பட்ட 5-வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் அஞ்சலிதேவி நெடுஞ்செழியன் நகராட்சியில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
முன்னதாக தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டவர்களுடன் வேட்பாளர் அஞ்சலி தேவி முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்தார். அப்போது பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள இரட்டை காளியம்மன் கோயிலில் தனது பகுதி வாக்காளர்களுடன் வந்த வேட்பாளர் அஞ்சலிதேவி சுவாமி தரிசனம் செய்தார்.
அப்போது கோயிலில் இரட்டை காளியம்மன் முன்பு தான் இத்தேர்தலில் வெற்றி பெற்ற ஒரு மாதத்தில் ஈசானிய தெருவில் உள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த தீவிர நடவடிக்கை எடுப்பேன் என்றும் வார்டு மக்களுக்கு கணினி மையம் அமைத்து இலவசமாக இ-சேவை பதிவுகள் செய்யப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்.