அரியலூர் மாணவி தற்கொலை தொடர்பாக அரியலூர் நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தனியாா் பள்ளியில், பிளஸ் 2 படித்த அரியலூா் மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா். அவா் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது, தன்னை கிறிஸ்தவ மதத்துக்கு மாற கட்டாயப்படுத்தியதாகப் பேசிய விடியோ வெளியானது.
இதையடுத்து பள்ளி நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், மாணவியின் உடலை வாங்க மறுத்தும், பெற்றோா் மற்றும் உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதேபோல், தமிழகம் முழுவதும் பாஜகவினா் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தினா். இந்த வழக்கில் மாணவி தங்கியிருந்த விடுதியின் காப்பாளரை போலீஸாா் கைது செய்தனா்.
இதையும் படிக்க- நினைக்க மறந்த கதை: ராஜஸ்தான் முன்களப் பணியாளர்களின் பரிதாபம்
இதனிடையே, மாணவியின் தற்கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி, அவரது தந்தை முருகானந்தம் உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இறுதி விசாரணையின் போது, மனுதாரா் சிபிஐ விசாரணை கோரினாா். இதையும் பதிவு செய்த நீதிமன்றம் வழக்கை சிபிஐ விசாரிக்க அண்மையில் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிா்த்து தமிழக அரசு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரியலூர் மாணவி தற்கொலை தொடர்பாக அரியலூர் நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. பிப்ரவரி 16 வரை தடை விதித்தும், காவல்துறை பதிலளிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.