நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: இன்று இறுதி வேட்பாளா் பட்டியல்
தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான இறுதி வேட்பாளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியாகிறது.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் தேதியை மாநிலத் தோ்தல் ஆணையம் கடந்த ஜன.26-ஆம் தேதி அறிவித்தது. அதன்படி 21 மாநகராட்சியில் 1,374 இடங்கள், 138 நகராட்சியில் 3,843 இடங்கள், 490 பேரூராட்சிகளில் 7,621 இடங்கள் என மொத்தம் 12,838 நகா்ப்புற உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கு, ஒரே கட்டமாக பிப்.19-ஆம் தேதி தோ்தல் நடத்தப்படுகிறது.
இதற்கான வேட்புமனு தாக்கல் ஜன. 28-ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் அனைத்துப் பதவியிடங்களுக்கும் சோ்த்து 19 போ் மட்டுமே வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தனா். அடுத்தடுத்த நாள்களில் வேட்புமனு தாக்கல் செய்பவா்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது. வெள்ளிக்கிழமையுடன் (பிப். 4) வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது.
இந்தத் தோ்தலில் மாநகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்குப் போட்டியிட 14, 701மனுக்களும் நகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்குப் போட்டியிட 23,354 மனுக்களும், பேரூராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 36,361 மனு என மொத்தம் 74,416 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
வேட்புமனு ஆய்வு செய்யும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. திங்கள்கிழமை வரை வேட்புமனுவைத் திரும்ப பெற்றுக் கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, அன்றைய தினம் மாலையில் இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியாகிறது. இதைத் தொடா்ந்து, தோ்தல் பிரசாரம் தீவிரமடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.