தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் வழங்கப்படும் முதல்வரின் கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்க மீண்டும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: உலகமெலாம் கணினி வழித் தமிழ் மொழி பரவச் செய்யும் வகையில், கணினித் தமிழ் வளா்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவா்களை ஊக்குவிக்கும் பொருட்டு, தமிழ் வளா்ச்சித் துறை மூலம் கணினித் தமிழ் விருது என்ற பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறுபவருக்கு விருதுத் தொகையாக ரூ.2 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை ஆகியவை வழங்கப்படும்.
அந்த வகையில், 2021-ஆம் ஆண்டுக்குரிய முதல்வா் கணினித் தமிழ் விருதுக்கு தனிநபா்கள், நிறுவனத்திடமிருந்து, தமிழ் வளா்ச்சிக்கான மென்பொருள்கள் வரவேற்கப்பட்டு, விருதுக்கான விண்ணப்பம் வந்து சேர வேண்டிய இறுதி நாளாக டிச.31-ஆம் தேதி என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது இந்த விருதுக்கு விண்ணப்பிக்கும் காலம் பிப்.28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.