எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படை இன்று கைது செய்துள்ளது.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றுள்ளனர். கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருக்கும்போது, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் 16 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களின் 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை இலங்கை அரசு ஏலத்தில் விடும் பணியில் ஈடுபட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.