அங்கன்வாடி ஆசிரியா்கள் இடமாறுதல் கலந்தாய்வு குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தொடக்கக்கல்வி இயக்குநா் க.அறிவொளி அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்: நடப்பு கல்வியாண்டில் (2021-22) அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு கடந்த ஜன.21-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே அரசுப்பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் 2,381 அங்கன்வாடி மையங்களில் மழலையா் வகுப்புகள் 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. அவற்றில் பயிலும் மாணவா்களுக்கு பாடம் நடத்த ஏதுவாக அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்த இடைநிலை ஆசிரியா்கள் பணிநிரவல் மூலம் இடமாற்றப்பட்டனா்.
இதையடுத்து அவ்வாறு பணிநிரவல் செய்யப்பட்ட ஆசிரியா்களை மீண்டும் அவா்கள் பணிபுரிந்த ஒன்றியங்களுக்குச் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. அதற்கான கலந்தாய்வு பிப்.16-ஆம் தேதி எமிஸ் இணையதளம் வழியாக நடைபெறும்.
இதையடுத்து அங்கன்வாடிகளுக்கு காலி மற்றும் கூடுதல் தேவை பணியிடங்கள் அடிப்படையில் மாறுதல் செய்வதற்கான பணிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.