கீழையூர் அருகே திருப்பூண்டியில் பாஜக நிர்வாகி காரை மர்ம நபர்கள் தீ வைத்த நிலையில், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு போலீசார் தீவிர வீசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டியை சேர்ந்த பாஜக இளைஞரணி மாவட்ட துணைத்தலைவர் புவனேஸ்வர்ராம். இவர் வீட்டுக்கு முன்பு தகர சீட்டு போட்ட செட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புது ஓம்னி காரின் இடது பக்க கதவு இடது பக்க டயர் ஆகியவை தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதனை அவ்வழியாக வந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சக்திகுமார் தந்தை குஞ்சையன் தகவல் தெரிவித்ததன் பேரில் வீட்டில் இருந்த புவனேஸ்வர்ராம் மற்றும் அவரது தாய் ராஜேஸ்வரி ஆகியோர் தண்ணீர் ஊற்றி கார் முழுவதும் எரிவதற்குள் அணைத்தனர்.
அதன் பின்னர் மர்ம நபர்கள் காரை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தி இருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து கீழையூர் காவல் நிலையத்தில் புவனேஸ்வர்ராம் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் தற்பொழுது கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு போலீசார் பல்வேறு கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாஜக நிர்வாகியின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.