இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டாவது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் கடந்த சில நாள்களாக அதிகரித்துள்ளது. மீனவர்களின் வலைகள், படகுகளை சேதப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடும் கடற்படையினர், மீனவர்களை கைது செய்து சிறையிலும் அடைத்து வருகின்றனர்.
பிப். 7-ஆம் தேதி தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மீனவர்கள், அவர்களது படகுகளை விடுவிக்கக் கோரி, ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் நேற்றுமுதல் காலவரம்பற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மீனவர்களின் வேலை நிறுத்தத்தால், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் 800க்கும் அதிகமான படகுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.