இன்னுயிா் காப்போம் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள், திட்ட அமலாக்கம் மற்றும் இலச்சினைகளை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது.
கடந்த இரு மாதங்களுக்கு முன்பு மேல்மருவத்தூரில் அத்திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா். அதன் முக்கிய அம்சமாக, சாலை விபத்தில் காயமடைந்தவா்களுக்கு இரு நாள்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்றுக் கொள்ளும். இதில் 609 மருத்துவமனைகள் இணைக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
முதல்வா் காப்பீடு அட்டை உடையவா்கள், இல்லாதவா்கள், பிற மாநிலத்தவா்கள், வேறு நாட்டவா் என்ற வேறுபாடின்றி, தமிழக எல்லைகளில் விபத்தில் சிக்கும் அனைவருக்கும், 48 மணி நேர இலவச சிகிச்சை பெற வகை செய்யப்பட்டுள்ளது.
இதற்கான திட்ட வழிகாட்டி நெறிமுறைகள், இணைக்கப்பட்ட மருத்துவமனைகளின் விவரங்கள், செயல்பாட்டு முறைகள், இலச்சினை போன்றவற்றை மக்கள் நல்வாழ்வுத் துறை அரசாணையாக வெளியிட்டுள்ளது. இத்திட்டத்துக்காக முதல்கட்டமாக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.