எல்.ஐ.சி. பங்குகளை விற்கும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுபற்றிய முதல்வரின் சமூக ஊடகப் பதிவு:
"எல்.ஐ.சி. நிறுவனம் பல்லாண்டுகளாகப் பலகோடி இந்தியர்களின் தேவைகளை நிறைவுசெய்து, அவர்களின் நன்னம்பிக்கையைச் சம்பாதித்து, தனது திறம்பட்ட செயல்பாட்டால் அவர்களுக்குச் சமூகப் பாதுகாப்பை வழங்கியுள்ளது.
இதையும் படிக்க | வலிமை புதிய க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு
அத்தகைய நிறுவனத்தின் பங்குகளில் 5 விழுக்காட்டை விற்பனை செய்ய ஒன்றிய அரசு வரைவு அறிக்கை தாக்கல் செய்திருப்பது தனியார்மயத்தை நோக்கிய - முற்றிலும் விரும்பத்தகாத செயலாகும்.
இம்முடிவு மக்களின் நலனையோ LIC நிறுவனத்தின் நலனையோ கருதி மேற்கொள்ளப்பட்டதன்று என்பது வெள்ளிடைமலை. ஒரு நல்லரசு என்பது நிறுவனங்களைக் கட்டியமைக்க வேண்டுமேயன்றி; தொடர் விற்பனையில் ஈடுபடுவதில் மும்முரம் காட்டக் கூடாது.
முறையான யோசனையின்றி எடுக்கப்பட்ட இம்முடிவை ஒன்றிய அரசு திரும்பப் பெற்று எல்.ஐ.சி. நிறுவனத்தைக் காக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்."