கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்கு முன்பிருந்தது போலவே, புறநகர் மின்சார ரயில்சேவைகள் இன்று முதல் மீண்டும் இயக்கப்படுகின்றன.
தமிழகத்தில் நிகழாண்டில் ஜனவரியில் மீண்டும் கரோனா நோய்த்தொற்று வேகமாகப் பரவியதைத் தடுக்க, வாரநாள்களில் இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்தது. இதனால் புறநகர் ரயில் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை ரயில்வேநிர்வாகம் விதித்தது. அதாவது, இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டும் மின்சார ரயிலில் பயணிக்க அனுமதி, ஞாயிற்றுக்கிழமைகளில் ரயில் சேவைகள் குறைப்பு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இதற்கிடையில், கரோனா நோய்த்தொற்று ஜனவரி இறுதியில் குறையத் தொடங்கியதால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் சிறிது தளர்த்தப்பட்டன. இதுபோல, புறநகர் ரயில்களில் பயணிக்க இருந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக விலக்கிக் கொள்ளும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
புறநகர் மின்சார ரயில்களில் அனைத்து பயணிகளும் பிப்.1-ஆம் தேதி முதல் மீண்டும் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். ரயில் சேவையும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில், கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்கு முன்பு இயக்கப்பட்டதைப் போலவே, புறநகர் ரயில் சேவை இன்று முதல் மீண்டும் இயக்கப்படுகின்றன. இதன்படி, இன்று முதல் சனிக்கிழமை வரை வாரநாள்களில் சென்னை-அரக்கோணம் மார்க்கத்தில் 254 சேவைகளும், சென்னை-கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் 84 சேவைகளும், சென்னை கடற்கரை-வேளச்சேரி மார்க்கத்தில் 80 சேவைகளும், சென்னை கடற்கரை-செங்கல்பட்டு மார்க்கத்தில் 240 சேவைகளும் வழங்கப்படவுள்ளன. அதாவது, வார நாள்களில் மொத்தம் 658 நடையில் மின்சார ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.