சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தாயமங்கலம் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் கடந்த புதன்கிழமை இரவு மாசி தெப்ப உற்சவம் நடைபெற்றது.
இதையொட்டி மூலவர் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு அபிஷேகம் நடத்தி சிறப்புப் பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து உற்சவர் அம்மன் பல்லக்கில் புறப்பாடாகி கோயில் எதிரே தெப்பக்குளத்தில் நிறுத்தப்பட்டிருந்த தேருக்கு எழுந்தருளினார்.
அதைத் தொடர்ந்து மேளதாளம் முழங்க தெப்பத்தேர் தெப்பக்குளத்திற்குள் மூன்று முறை வலம் வந்தது. ஏராளமான பெண்கள் தெப்பக் குளத்தைச் சுற்றி விளக்கேற்றி வைத்து தெப்ப உற்சவத்தை கண்டு அங்காள பரமேஸ்வரி அம்மனை தரிசனம் செய்தனர். தெப்ப உற்சவம் நிறைவடைந்ததும் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோயிலைச் சென்றடைந்தார்.