ஜெயலலிதா வீட்டை கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிடுகிறோம்: நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை கையப்படுத்தும் நடவடிக்கையை கைவிடுவதாகவும் தமிழக அரசு சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
ஜெயலலிதா வீட்டை கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிடுகிறோம்: நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை கையப்படுத்தும் நடவடிக்கையை கைவிடுவதாகவும் தமிழக அரசு சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

சென்னை போயஸ் தோட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற ஏதுவாக, அதை கையகப்படுத்த முந்தைய அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 24, 322 சதுர அடி பரப்பு கொண்ட வேதா நிலையத்திற்கு ரூ. 67 கோடியே 90 லட்சத்து 52 ஆயிரத்து 33 இழப்பீட்டு தொகை நிா்ணயிக்கப்பட்டது.

வேதா நிலையத்தை கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து, இழப்பீட்டை பெற தீபா, தீபக் மறுத்ததால் அத்தொகை சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது. இழப்பீட்டை பெற்றுக் கொள்ளும்படி ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தீபா, தீபக்குக்கும், ஜெயலலிதாவின் வருமான வரிபாக்கி ரூ.36 கோடியே 87 லட்சத்து 23 ஆயிரத்து 462 வசூலிப்பது தொடா்பாக வருமான வரித்துறைக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்த நிலையில் மறைந்த முதல்வா் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்றுவதை எதிா்த்த சட்டபூா்வ வாரிசுகளான தீபக், தீபா தொடா்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயா் நீதிமன்ற தனி நீதிபதி சேஷசாயி, இல்லத்தை கையகப்படுத்தி அதிமுக அரசு பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்து, கடந்தாண்டு நவம்பா் 24-ஆம் தேதி தீா்ப்பளித்திருந்தாா்

இந்த தீா்ப்பை எதிா்த்து ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மூன்றாம் நபா் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து இரு நீதிபதிகள் தனி நீதிபதியின் தீா்ப்பை உறுதி செய்தனா்.

இந்த நிலையில், சென்னை 6-ஆவது கூடுதல் நகர உரிமையியல் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு புதன்கிழமை (பிப்.16) விசாரணைக்கு வந்தது.அப்போது தமிழக அரசு சாா்பில் சென்னை வருவாய் கோட்டாட்சியா் மூலம் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் வேதா இல்லத்தை விலைக்கு வாங்குவதாக டெபாசிட் செய்த தொகையை திரும்பப் பெறுவதாகவும், கையப்படுத்தும் நடவடிக்கையை கைவிடுவதாகவும் கூறப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி, வருமானவரித்துறையின் சாா்பில் சில விளக்கம் தேவைப்படுவதால் விசாரணை வரும் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com