நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி சீராக நடைபெறுகிறது.
நாகப்பட்டினம், வேதாரண்யம் நகராட்சிகள், கீழ்வேளூர், வேளாங்கண்ணி, தலைஞாயிறு, திட்டச்சேரி பேரூராட்சிகள் என நாகை மாவட்டத்தில் 6 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 117 வார்டு உறுப்பினர்கள் பதவிக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதில், நாகை நகராட்சியில் ஒரு வார்டு உறுப்பினர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனால், தற்போது 116 வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு, தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
நாகை நகராட்சியில் 88 வாக்குச் சாவடிகள், வேதாரண்யம் நகராட்சி 36 வாக்குச் சாவடிகள், கீழ்வேளூர், வேளாங்கண்ணி, தலைஞாயிறு, திட்டச்சேரி பேரூராட்சிகளில் தலா 15 வாக்குச் சாவடிகள் என மாவட்டத்தில் மொத்தம் 184 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறகிறது.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
வாக்குச் சாவடிகளில் வாக்காளர்களின் உடல் வெப்பநிலை கணக்கிடப்பட்ட பின்னரே வாக்குப்பதிவுக்கு அனுமதிக்கப்பட்டனர். அதேபோல, கிருமி நாசினியைக் கொண்டு கைகளை சுத்தம் செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டனர்.
வாக்குச் சாவடி பணிகளில் அரசுப் பணியாளர்கள் 752 பேரும், பாதுகாப்புப் பணியில் 850 போலீஸாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க | நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: வாக்களித்தார் நடிகர் விஜய்