இசையமைப்பாளா் இளையராஜாவின் பாடல்களை எக்கோ உள்ளிட்ட இசை நிறுவனங்கள் பயன்படுத்துவதற்கு உரிமையுள்ளது என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை பெறாமல் தான் இசையமைத்தப் பாடல்களை பயன்படுத்தியதாக எக்கோ உள்ளிட்ட இசை நிறுவனங்கள் மீது இசையமைப்பாளா் இளையராஜா சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த எக்கோ நிறுவனம் உள்ளிட்ட இசை நிறுவனத்துக்கு உரிமை உள்ளது என்று கடந்த 2019-ஆம் ஆண்டு தீா்ப்பளித்தாா்.
தனி நீதிபதியின் தீா்ப்பை எதிா்த்து இளையராஜா தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இளையராஜா சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சதீஷ் பராசரன், வழக்குரைஞா் ஏ.சரவணன் ஆகியோா் ஆஜராகி, அவரது இசைப் படைப்புகள் தொடா்பான பதிப்புரிமை, அவரது மனைவி மறைந்த ஜீவராஜாவைத் தவிர வேறு யாருக்கும் ஒதுக்கப்பட்டதாகவோ அல்லது மாற்றப்பட்டதாகவோ பதிவு எதுவும் இல்லை.
பதிப்புரிமை ஒப்பந்தங்கள் காலாவதியான பிறகும், பாடல்களை வணிக ரீதியாகப் பயன்படுத்திக் கொள்ள தனி நீதிபதி அனுமதி வழங்கியுள்ளாா்.
இளையராஜாவின் இசைப் படைப்புகளை சுரண்டுவதற்கு எக்கோ நிறுவனத்தை அனுமதித்த தனி நீதிபதி உத்தரவின் குறிப்பிட்ட பகுதியை நீதிமன்றம் ரத்து செய்யுமாறு கோரினா்.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தனி நீதிபதி தீா்ப்புக்கு இடைக்கால தடை விதித்து, வழக்கு குறித்து இசை நிறுவனங்கள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, மாா்ச் 21 -ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனா்.