நாகை மீனவர்கள் 21 பேரை விடுதலை செய்து இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும்போது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை அவர்களை கைது செய்து வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பின்னர் தமிழக அரசு வலியுறுத்தலின்பேரிலோ அல்லது நீதிமன்ற உத்தரவினால் அவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில், நாகையைச் சேர்ந்த மீனவர்கள் 21 பேரை விடுதலை செய்து இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர்கள், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கடந்த ஜனவரி 31 ஆம் தேதி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விடுதலை செய்யப்பட்ட 21 மீனவர்களும் ஓரிரு நாளில் தாயகம் திரும்ப உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.