திருக்காட்டுப்பள்ளி: பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை வழக்குத் தொடர்பாக தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள மைக்கேல்பட்டியில் சிபிஐ அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த லாவண்யா (17) ஜனவரி மாதம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து லாவண்யாவை அதிக வேலை வாங்கி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக விடுதிக் காப்பாளர் சகாயமேரியை கைது செய்தனர்.
ஆனால், விடுதிக் காப்பாளர் உள்ளிட்டோர் மதம் மாறுமாறு வற்புறுத்தியதால் லாவண்யா தற்கொலை செய்து கொண்டார் என பெற்றோர் புகார் எழுப்பினர். இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் லாவண்யாவின் தந்தை முருகானந்தம் வழக்குத் தொடுத்தார்.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில், முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்த சிபிஐ அலுவலர்கள் அண்மையில் விசாரணையைத் தொடங்கினர்.
இந்நிலையில், மைக்கேல்பட்டியில் லாவண்யா படித்த பள்ளி மற்றும் விடுதியில் சிபிஐ காவல் தலைவர் வித்யா குல்கர்னி, காவல் கண்காணிப்பாளர் நிர்மலா தேவி, துணைக் கண்காணிப்பாளர்கள் ரவி, சந்தோஷ், ஆய்வாளர் சுமதி உள்ளிட்டோர் பிற்பகல் 12:20 மணி முதல் விசாரணை நடத்தி வருகின்றனர்.