தமிழக நகர்ப்புற தேர்தலை நாங்கள் நடத்தவில்லை என, தேர்தல் ஆணையம், மாநில பாஜக தலைவர் அண்ணாமலைக்கு விளக்கம் அளித்துள்ளது.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பல இடங்களில் முறைகேடு நடந்ததாக தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை தனது சுட்டுரையில் சில விடியோக்களை இணைத்து வெளியிட்டிருந்தார்.
அது மட்டுமல்லாமல், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றதாக திமுக அரசு கூறுகிறது. ஆனால், எந்தஅளவுக்கு முறைகேடுகள் நடந்திருக்கிறது என்பதை இந்த விடியோக்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
வாக்கு எண்ணிகை நாளிலாவது, தேர்தல் ஆணையம் தனது கண்களை மூடிக் கொண்டிருக்காமல் கவனமாக இருக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தை டேக் செய்திருந்தார்.
இதில் என்ன விஷயம் என்றால், தமிழக தலைமைத் தேர்தல் அலுவலகத்தை டேக் செய்யாமல், மத்திய தேர்தல் ஆணையத்தை டேக் செய்திருந்தார். இதையடுத்து, அண்ணாமலைக்கு மத்திய தேர்தல் ஆணையம் விளக்கம் ஒன்றை சொல்லியிருக்கிறது.
தமிழக நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சித் தேர்தல்களை தலைமைத் தேர்தல் ஆணையம் நடத்துவதில்லை. இதனை மாநில தேர்தல் ஆணையம்தான் நடத்துகிறது. உங்களது புகார்கள் மற்றும் சந்தேகங்களுக்கு உரிய அதிகாரியை தொடர்பு கொள்ளவும் என்று தெரிவித்துள்ளது.