செங்கோட்டையன் கோட்டையில் கொடி நாட்டியது திமுக

செங்கோட்டையன் கோட்டையில் கொடி நாட்டியது திமுக

செங்கோட்டையனின் கோட்டையான கோபி நகராட்சியில் தொடர்ந்து 3 முறை தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றிய நிலையில், இம்முறை திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 

செங்கோட்டையனின் கோட்டையான கோபி நகராட்சியில் தொடர்ந்து 3 முறை தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றிய நிலையில், இம்முறை திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 

ஈரோடு மாவட்டம் கோபி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. நகராட்சியில் மொத்தமுள்ள வாக்காளர்களான 48 ஆயிரத்து 247 வாக்காளர்களில், 35 ஆயிரத்து 141 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். இது 72.84 சதவீத வாக்குப்பதிவாகும். இதில் அதிகபட்சமாக 1வது வார்டில் 83.47 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக 58.31 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. 

கோபி நகராட்சியில் கடந்த 1996- ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நல்லசாமி தலைவராகவும், 2001-ம் ஆண்டு, அ.தி.மு.க.வை சேர்ந்த கந்தவேல்முருகனும்,  2006 மற்று 2011ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் அ.தி.மு.க.வை சேர்ந்த ரேவதி தேவியும் தலைவர் பதவியை வகித்து உள்ளனர். கடந்த 2006 மற்றும் 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. 23 வார்டுகளை கைப்பற்றி தலைவர் பதவியைக் கைப்பற்றியுள்ளது.  

கோபி நகராட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக தலைவர் பதவி அ.தி.மு.க வசமே இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நான்காவது முறையாக அதிமுக தலைவர் பதவியைத் தொடர வேண்டுமானால் அதிக வார்டுகளில் அதிமுக கவுன்சிலர்கள் வெற்றி பெற வேண்டிய நிலை இருந்தது. 

இந்நிலையில், தேர்தல் முடிவுகளில் மொத்தமுள்ள 30 வார்டுகளில், திமுக 14 வார்டுகளிலும், அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றதன் மூலம், கோபி நகராட்சி திமுக வசமாகியுள்ளது. அதிமுக 13 வார்டுகளிலும், சுயேச்சை ஒரு வார்டிலும் இங்கு வெற்றி பெற்றுள்ளனர். இதன்மூலம் திமுக கூட்டணி கோபி நகராட்சியை கைப்பற்றியுள்ளது. 

இதுகுறித்து திமுக நிர்வாகிகள் கூறியதாவது, 

அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையனின் கோபி தொகுதி, அதிமுகவின் கோட்டையாக இதுவரை இருந்து வந்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலின்போதும், தேர்தலுக்கு பிறகும் செங்கோட்டையனின் சகோதரர் காளியப்பன், அவரது மகன் செல்வம், செங்கோட்டையனுடன் மிக நெருக்கமாக இருந்த சிந்து ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்தனர். 

இந்த மாற்றங்களுக்குப் பிறகு, நடந்த கோபி நகராட்சித் தேர்தலில்,  தலைவர் பதவியைக் கைப்பற்றுவதை தங்கள் கௌரவப் பிரச்னையாக எடுத்து, திமுகவினர் தேர்தல் பணி ஆற்றினர். இந்த உழைப்பிற்கான பரிசு கிடைத்து, கோபி அதிமுகவின் கோட்டை என்பது தகர்ந்துள்ளது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com