ஸ்ரீபெரும்புதூர்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வரும் நிலையில், திமுக அதிக வார்டுகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் குன்றத்தூர் மற்றும் மாங்காடு நகராட்சிகளைக் கைப்பற்றியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட குன்றத்தூர் மற்றும் மாங்காடு நகராட்சிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் குன்றத்தூர் மாதா பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டது. இந்தநிலையில், குன்றத்தூர் நகராட்சியில் உள்ள மொத்தம் உள்ள 30 வார்டுகளில், திமுக 22 வார்டுகளிலும், அதிமுக 5 வார்டுகளிலும், காங்கிரஸ் 2 வார்டுகளிலும், சுயேட்சை ஒன்றிலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் திமுக தனிப்பெரும்பான்மையுடன் குன்றத்தூர் நகராட்சியைக் கைப்பற்றியுள்ளது.
அதேபோல், மாங்காடு நகராட்சியில் மொத்தமுள்ள 27 வார்டுகளில் திமுக 14 வார்டுகளிலும், மதிமுக 2 வார்டுகளிலும், அதிமுக 6 வார்டுகளிலும், சுயேட்சைகள் 5 வார்டுகளிலும் வெற்றிபெற்றனர். இதனால் மாங்காடு நகராட்சியையும் திமுக தனிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ளது.