எங்களை தோற்கடிப்பதில் உங்களுக்கு ஒரு பெருமையும் இல்லை என்று தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் மக்கள் நீதி மய்யம் பெற்ற தோல்வி குறித்து அக்கட்சியின் நிறுவனர் கமல் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி, ஒரு வெற்றியையும் பதிவு செய்யவில்லை.
இந்த நிலையில், அக்கட்சியின் நிறுவனர் கமல் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம் என்பது ஒரு சம்பிரதாயமான வார்த்தை. அதை நான் சொல்ல விரும்பவில்லை. மக்களும் பல சமயங்களில் கூட்டாகச் சேர்ந்து தவறான முடிவுகளை எடுப்பார்கள். வரலாறு நெடுக அதற்கு உதாரணங்கள் உண்டு. எங்களைப் போன்ற நேர்மையாளர்களை, அரசியலை பணம் குவிக்கும் தொழில்வாய்ப்பாகக் கருதாதவர்களை, வாக்குறுதி தந்துவிட்டு ஏமாற்றாதவர்களை, ஊழலற்ற வெளிப்படையான திறமையான நிர்வாகத்தின் மூலம் தமிழகத்தைச் சீரமைக்க நினைப்பவர்களைத் தோற்கடிப்பதில் உங்களுக்கு ஒரு பெருமையும் இல்லை.
நீங்கள் யாரை, எதற்காகத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதை உங்களின் அடுத்த தலைமுறை கவனித்துக் கொண்டிருக்கிறது. எங்களைப்ப் போன்ற மாற்று சக்திகளின் கரங்களை வலுப்படுத்த வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது. கடமையில்தவறியவர்கள் உரிமையை இழப்பார்கள் என்பதே வரலாறு நமக்கு உணர்த்தும் துரதிர்ஷ்டமான உண்மை என்று தெரிவித்துள்ளார்.