வேளாண் பட்ஜெட்: மக்களிடம் கருத்து கேட்கும் தமிழக அரசு 

2022-23 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தொடர்பாக மக்கள் தங்களின் கருத்துக்களை அரசுக்கு தெரிவிக்கலாம் என்று வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 
வேளாண் பட்ஜெட்: மக்களிடம் கருத்து கேட்கும் தமிழக அரசு 

2022-23 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தொடர்பாக மக்கள் தங்களின் கருத்துக்களை அரசுக்கு தெரிவிக்கலாம் என்று வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், விவசாயிகளின் நலனைப் பாதுகாத்து, அவர்களின் வருமானம் உயர்வதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு வழிகளில் நடவடிக்கை எடுத்துவருகிறது. அதன் ஒருபகுதியாக, தமிழகத்தின் சட்டமன்ற வரலாற்றில் முதல்முறையாக கடந்த 2021-22 ஆம் ஆண்டில் வேளாண்மைக்கு என்று தனியாக நிதிநிலை அறிக்கையினை மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். வேளாண்மைத் தொழிலில் பங்குபெற்றுள்ள அனைத்துத் தரப்பு மக்களின் கருத்துக்களை கேட்டு, பயிர் சாகுபடியுடன், உழவர் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களையும் ஒருங்கிணைத்து, 2021-22 ஆம் ஆண்டில் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதால், விவசாயிகள் மட்டுமல்லாது, வேளாண் சார்ந்த பல்வேறு பிரிவு மக்களின் பாராட்டினையும் பெற்றது.
சென்ற ஆண்டினைப் போன்று, எதிர்வரும் 2022-23 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தமிழ்நாடு சட்டமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது. வேளாண் நிதிநிலை அறிக்கையினை தயாரிப்பதற்கு முன்னர், விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், வேளாண் விஞ்ஞானிகள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் வேளாண் விளைபொருள் ஏற்றுமதியாளர்கள் என பல்வேறு வகையான பிரிவுகளைச் சார்ந்த மக்களின் கருத்துக்களை கேட்டு, அதற்கேற்ப வேளாண் நிதிநிலை அறிக்கையினை தயாரிக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
முதலமைச்சரின் அறிவுரைக்கேற்ப, நேற்று (23.02.2022) தலைமைச் செயலகத்தில், வேளாண் நிதிநிலை அறிக்கை தொடர்பான கருத்துக்கேட்புக்கூட்டம்  வேளான்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தலைமையில் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில், மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் விவசாயிகள், வேளாண் வர்த்தகர்கள், வேளாண் ஏற்றுமதியாளர்கள், வேளாண் தொழில் சார்ந்த கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, உணவு பதப்படுத்துதல் சார்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டு, தங்கள் கருத்துக்களை தெரிவித்தார்.
இதுபோன்று, விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், விவசாயச் சங்கப்பிரதிநிதிகள், வேளாண் விஞ்ஞானிகள், ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்ட
வேளாண்மையில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பு மக்களின் கருத்துக்களை கேட்டறியும் வகையில், மாநிலத்தில் கருத்துக்கேட்புக்கூட்டங்கள் விரைவில் நடத்தப்படவுள்ளன. இதுமட்டுமல்லாது, காணொலிக் காட்சிகள் மூலமாகவும், அனைத்துப் பிரிவுகளைச் சார்ந்துள்ள மக்களிடமிருந்தும் கருத்துக்களை பெறுவதற்கு வேளாண்மை - உழவர் நலத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட ஆட்சித்தலைவர்கள் தலைமையில் நடத்தப்பட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாட்களில் விவசாயிகள் தெரிவித்துள்ள அனைத்துக் கருத்துக்களும் தொகுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், இத்தகைய கூட்டங்களில் கலந்து கொள்ள இயலாத மக்களும் தங்களின் கருத்துக்களை அரசுக்கு தெரிவிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், அதற்கான தீர்வுகுறித்து தங்களின் கருத்துக்கள், அறிவுரைகள் உள்ளிட்ட பல்வேறு விபரங்களை வேளாண் சார்ந்த பொதுமக்கள் அரசுக்கு கடிதம் அல்லது மின்னஞ்சல் அல்லது வாட்ஸ் ஆப் தொலைபேசி எண் அல்லது இதர சமூக ஊடகங்கள் மூலம் தெரிவிக்கலாம்.

1. கடிதம் அனுப்ப வேண்டிய முகவரி:
வேளாண்மை உற்பத்தி ஆணையர் (ம) அரசுச் செயலர்,
வேளாண்மை - உழவர் நலத்துறை,
தலைமைச் செயலகம்,
புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை,
சென்னை – 600 009.
2. மின்னஞ்சல் முகவரி agrisec@tn.gov.in அல்லது agrips@tn.gov.in
3. வாட்ஸ் ஆப் மூலம் தகவல் தெரிவிப்பதற்கான தொலைபேசி: 93848
76300
4. டிவிட்டர் மூலம் தெரிவிப்பதற்கு @ agridept_tn
5. ‘உழவன் ஆப்’-இல் “பட்ஜெட் கருத்துக்கள்” என்ற சேவையின் கீழ்
பதிவு செய்யலாம்.

2022-23 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையானது, விரைவில் தாக்கல் செய்யப்படும் என்பதால், விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், விவசாயச் சங்கப்பிரதிநிதிகள், வேளாண் விஞ்ஞானிகள், ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவு மக்களும் தங்களின் மேலான கருத்துக்களை அரசுக்கு மேற்காணும் ஏதாவதொரு ஊடகம் மூலம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com