கோவில்பட்டி அருகே பட்டாசுத் தொழிற்சாலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே துறையூரில் உள்ள பட்டாசு ஆலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.
இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின், பட்டாசுத் தொழிற்சாலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன் நிவாரண உதவியையும் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
'தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், துறையூர் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் கொப்பம்பட்டியைச் சேர்ந்த குருசாமி ஈராச்சியின் மகன் ராமர், பொய்யாமொழி மகன் தங்கவேல், தொட்டம்பட்டி, பசுவந்தனையைச் சேர்ந்தகுட்டையன் மகன் ஜெயராஜ்; நாலாட்டின்புதூரைச் சேர்ந்த வெள்ளச்சாமி மகன் மாடமுத்து என்கிற கண்ணன் ஆகிய நான்கு நபர்கள் உயிரிழந்த துயரச் செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 3 லட்சம், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | கோவில்பட்டி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 4 போ் பலி