தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டையில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி சனிக்கிழமை காலை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நாஞ்சிக்கோட்டை வீரமுனியாண்டவர் கோயில் சிவராத்திரி விழாவையொட்டி நடைபெறும் இந்நிகழ்ச்சியைக் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) என்.ஓ. சுகபுத்ரா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து வாடிவாசலிலிருந்து காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்படுகிறது. இதற்காக தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஏறத்தாழ 600 காளைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
காளைகளைப் பிடிப்பதற்காக ஏறக்குறைய 300 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
குறிப்பிட்ட தொலைவு வரை காளைகளைப் பிடித்துச் செல்லும் வீரர்களுக்கு சில்வர் பாத்திரங்கள், குத்துவிளக்கு, சைக்கிள் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்படுகின்றன. பிடிபடாத மாடுகளின் உரிமையாளர்களுக்குப் பரிசுகள் அளிக்கப்படுகின்றன.
நண்பகல் 12 மணி வரை 365 காளைகள் விடப்பட்ட நிலையில், 15 பேர் காயமடைந்துள்ளனர்.