ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மங்களாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.
ஆலங்குடி அருகேயுள்ள மங்களாபுரம் கருப்பர், முனீஸ்வரர் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. போட்டியை மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, சுற்றுச்சூழல், இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதில், புதுகை, திருச்சி, தஞ்சை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 700 காளைகள் அவிழ்த்துவிடப்பட உள்ளன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை 300 மாடு பிடி வீரர்கள் கலந்துகொண்டு அடக்க முயன்று வருகின்றனர்.
அப்போது, காளைகள் முட்டியதில் சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். வீரர்களின் பிடியில் சிக்காமல் போக்குக்காட்டிய காளைகளுக்கும், திமிறிய காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் பல்வேறு பரிசுப்பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் வை. முத்துராஜா, எம். சின்னதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.