கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் பகுதியில் உள்ள டிஜெஎஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவர்களான பி. இளங்கோவன் மற்றும் எச்.விக்னேஷ் ஆகியோர் எம்பிபிஎஸ் படிப்பிற்கு தேர்வாகியுள்ள நிலையில் அவர்களுக்கு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் கல்வி உதவித் தொகையாக தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கி பாராட்டினார் .
கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை அருகே சோம்பட்டு பகுதியை சேர்ந்த பாலு-கல்பனா ஆகியோரின் மகன் பி. இளங்கோவன் பெருவாயில் உள்ள டிஜெஎஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்தார். இவருக்கு எம்பிபிஎஸ் கலந்தாய்வில் சேலம் அன்னபூர்ணா கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்தது.
அவ்வாறே கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கத்தை சேர்ந்த ஹேபூஷணம்-லஷ்மி ஆகியோரின் மகன் விகேஷ் கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் டி.ஜெ.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்த இவர் எம்பிபிஎஸ் கலந்தாய்வில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க தேர்வானார்.
தொடர்ந்து இந்த இரண்டு மாணவர்களை பாராட்டும் விதமாக அவர்களுக்கு பாராட்டு விழா கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயில் டிஜெஎஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்வில் பள்ளி தாளாளர் டாக்டர் பழனி, டி.ஜெ.எஸ் கல்வி குழும இயக்குனர் டி.ஜெ.ஜி.தமிழரசன் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் ஞானப்பிரகாசம் வரவேற்றார்.
இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிபூண்டி எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் பங்கேற்று எம்பிபிஎஸ் படிப்பிற்கு தேர்வான மாணவர்கள் இழங்கோவன் விகேஷ் மற்றும் அவர்களது பெற்றோர்களையும் பாராட்டி அவர்களுக்கு சால்வை அணிவித்து ஸ்டெதஸ்கோப் வழங்கியதோடு அவர்களுடைய கல்வி உதவித்தொகையாக இருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கினார்.
தொடர்ந்து நிகழ்வில் பேசிய கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் எம்பிபிஎஸ் படிப்பிற்கு தேர்வானால் அவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்றும், மேற்கண்ட இரு மாணவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு மாணவர்கள் திறம்பட கல்வியில் தேர்ந்து அவரவர் விருப்ப பாடங்களை உயர் கல்வியில் தேர்வு செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.