சென்னை: காவல்துறையினர் குற்றம் நடப்பதை வேடிக்கை பார்ப்பது ஆபத்தானது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகர காவல்துறை கூடுதல் ஆணையர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தேசிய, மாநில சின்னங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டதாக ஒரு வழக்குக் கூட பதிவு செய்யப்படவில்லை என்று தகவல் வெளியாகியிருந்தது.
இந்த தகவலையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன் கருத்துக் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், குற்றம் நடப்பதை காவல்துறையினர் வேடிக்கை பார்ப்பது என்பது ஆபத்தானது. குற்றவாளிகளும் இதுபோன்ற சின்னங்களைத் தவறாகப் பயன்படுத்தி தப்பிவிடுகின்றனர். நாட்டில் அனைவலரும் சமமாக நடத்தப்படுகின்றனரா? என்பதை மக்களும் பார்ப்பார்கள் என்று கருத்துக் கூறியிருந்தார்.
தேசிய, மாநில சின்னங்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கக் கோரிய வழக்கில், காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், வாகன விதிமீறல்களில், நம்பர் பிளேட் தொடர்பாக 1.55 லட்சம் வழக்குகளும், கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது தொடர்பாக 4,600 வழக்குகளும் பதிவாகியிருந்தது. ஆனால், தேசிய, மாநில சின்னங்களை தவறாகப் பயன்படுத்தியதாக ஒரு வழக்கக் கூட பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.