சென்னை ஐ.ஐ.டி.யில் மின்சார வாகனங்கள் குறித்த முதுகலைப் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துவரும் நிலையில் இந்தப் பாடப்பிரிவுக்கான தேவை அதிகரித்துள்ளதால், சென்னை ஐஐடியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவிலும் சமீபகாலங்களாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஓசூரில் ஆர்தர் எனர்ஜி மற்றும் ஓலா ஆகிய நிறுவனங்கள் மின்சார வாகனங்கள் உற்பத்தி ஆலையைத் தொடங்கியுள்ளன.
எரிபொருள் பற்றாக்குறை, காற்று மாசு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பலர் தற்போது மின்சார வாகனங்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், சென்னை ஐஐடியில் மின்சார வாகனங்கள் குறித்த பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் 25 மாணவர்களை மின்வாகன படிப்பில் இணைக்க சென்னை ஐ.ஐ.டி. திட்டமிட்டுள்ளது.
இளங்கலை பி.டெக் (B.tech) பயிலும் மாணவர்கள் தங்களது 3-ஆம் ஆண்டு பட்டப்படிப்பின் இறுதியில் மின்சார வாகனங்கள் குறித்து 2 ஆண்டு முதுகலைப் பிரிவில் சேரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இணைந்து படிக்கக்கூடிய மாணவர்களுக்கு இளங்கலை மற்றும் முதுகலை ஆகிய இரண்டு பட்டங்கள் சேர்ந்து வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்புக் கல்வியாண்டில் இந்த மாதம் முதல் மின்சார வாகனங்கள் குறித்த இந்த பாடப்பிரிவில் மாணவர்கள் தங்களை இணைத்துக் கொள்ளலாம் என ஐஐடி தெரிவித்துள்ளது.