கொடைக்கானல் வெள்ளிநீர் வீழ்ச்சிப் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது சுற்றுலா வந்தவர்களின் கார் ஒன்று மோதியதில் 12 பேர் காயமடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். கொடைக்கானல் வெள்ளிநீர் வீழ்ச்சிப் பகுதியில் ஈரோடு, சென்னை போன்ற பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் நடந்து சென்று இயற்கை அழகை ரசித்துள்ளனர். அப்போது, கொடைக்கானலைச் சுற்றிப்பார்த்துவிட்டு கரூரைச் சேர்ந்த 8 பேர் காரில் திரும்பிச் சென்றுகொண்டிருந்தனர்.
இதையும் படிக்க.. நல்ல செய்தி: குறைந்தபட்ச ஓய்வூதியம் உயர வாய்ப்பு?
வெள்ளிநீர் வீழ்ச்சிப் பகுதியில் சென்ற போது கார் கட்டுப்பாட்டை மீறி அப்பகுதியில் நடந்து சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது மோதியது. இதில் சிறுவர்,பெரியவர் என 12 பேர் காயமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து காயமடைந்தவர்களை அப்பகுதியிலுள்ள சாலையோர வியாபாரிகள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் படுகாயமடைந்த சிலர் மேல் சிகிச்சைக்காக தேனி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்து கொடைக்கானல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விபத்து ஏற்படுத்தியவர்களை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களது காரையும் கைப்பற்றி ஆய்வு நடத்தி வருகின்றனர்.
சுற்றுலா இடங்களில் சாலையோரங்களில் கடைகள் அமைக்கப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் நடந்து செல்வதற்கும் வாகனங்கள் செல்வதற்கும் சிரமம் ஏற்படுகிறது. மேலும் சாலைகள் ஆக்கிரமிப்பால் சுற்றுலாத் தலங்களில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களை அகற்ற வேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கையாகும்.