கடலூர்: கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் துப்புரவு ஊழியர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ள நிலையில் சுமார் 300 நிரந்தர துப்புரவு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இன்று நகராட்சி நிர்வாக ஆணையர் மாநகராட்சியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, நகர் நல அலுவலர் ப.அரவிந்த்ஜோதி என்பவர் துப்புரவு ஊழியர்களை ஒருமையில் திட்டியதாகக் கூறப்படுகிறது.
அதற்கு கண்டனம் தெரிவித்து துப்புரவு ஊழியர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அதிகாரிகள் தங்களது ஆய்வினை பாதியில் முடித்துக் கொண்டு கிளம்பினர். இதனைத் தொடர்ந்து நகராட்சிகளின் இணை இயக்குநர் சி.விஜயகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.