புதுக்கோட்டையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து சிறுவன் உயிரிழந்த வழக்கில் தமிழக காவல்துறையும் சேர்க்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், நாா்த்தாமலை அருகே பசுமலைப்பட்டியில் டிச. 30 அன்று மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினா், திருச்சி மத்திய மண்டல போலீஸாரும் துப்பாக்கிச் சுடும் போட்டியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பசுமலைப்பட்டி மலையடிவாரத்திலிருந்த குடிசை வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்த கலைச்செல்வன் மகன் புகழேந்தியின் (11) தலைப் பகுதியில் எதிா்பாராத விதமாக திடீரென ஒரு துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது.
இதைத்தொடா்ந்து, தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு நடைபெற்ற அறுவைசிகிச்சையில் சிறுவனின் தலையில் பாய்ந்த துப்பாக்கிக் குண்டு அகற்றப்பட்டது. எனினும், ஜன. 3 அன்று சிகிச்சை பலனின்றி சிறுவன் புகழேந்தி உயிரிழந்தான்.
சிறுவனின் மரணத்துக்கு நீதி கேட்டும் துப்பாக்கி சுடும் தளத்தை மாற்ற வேண்டும் என்று கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதல்வர் மு.க.ஸ்டாலினும், சிறுவனுக்கு உரிய நீதி கிடைப்பதுடன் இதுபோன்ற சம்பவம் இனி நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து ரூ. 10 லட்சம் இழப்பீடும் அறிவித்தார்.
இது தொடர்பாக மத்திய தொழிற் பாதுகாப்புப்படை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இதில் தற்போது திருச்சி காவல்துறையும் சேர்க்கப்பட்டுள்ளது.
திருச்சி காவல்துறையிடமும் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.