மணல் குவாரிகளை இயக்குவது குறித்து விரைவில் அறிவிப்பு: அமைச்சர் துரைமுருகன்

தமிழகத்தில் மணல் குவாரிகளை மீண்டும் இயக்குவது குறித்து விரைவில் அரசு அறிவிப்பு வெளியாகும் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
துரைமுருகன் (கோப்புப் படம்)
துரைமுருகன் (கோப்புப் படம்)

தமிழகத்தில் மணல் குவாரிகளை மீண்டும் இயக்குவது குறித்து விரைவில் அரசு அறிவிப்பு வெளியாகும் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

பொலிவுறு நகர் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் வேலூர் புதிய பேருந்து நிலையத்தை ரூ.45 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தார். புதிய பேருந்து நிலைய வடிவமைப்பில் சில மாற்றங்களை செய்திடவும் அவர் அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியது:

வேலூர் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை பார்த்தால் கரோனா வந்ததுபோல் உள்ளது. பேருந்து நிலையத்தை தாறு மாறாக கட்டி வருகின்றனர். பக்கத்தில் உள்ள தனியார் இடங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்ற நோக்கத்திலேயே பேருந்து நிலைய வடிவமைப்பு அமைந்துள்ளது. இதனால், மழை காலத்தில் பேருந்து நிலையத்தில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்படும்.

இதைத்தவிர்க்க சில மாற்றங்கள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, புதிய பேருந்து நிலையத்தில் 2 நுழைவு வாயில்கள் அமைக்கப்படும். நுழைவுவாயில் அருகே எவ்வித கடைகளும் கட்டக்கூடாது. கழிவறைகள் நவீனமாக கட்டி முடிக்கப்பட வேண்டும். தொடர்ந்து புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை அடிக்கடி ஆய்வு செய்வேன். அப்போது முறைகேடாக கட்டப் படுவது தெரியவந்தால் சிபிசிஐடி மூலம் விசாரணை நடத்தப்பட்டு தவறு செய்த அதிகாரிகள் உள்பட அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

வேலூர் கிரீன்சர்க்கிள் ரவுண்டானா இருக்கும்வரை அவ்விடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படு வதை தவிர்க்க முடியாது. கிரீன் சர்க்கிள் பகுதியிலுள்ள ஹோட்டல்கள், கடைகள் முன் வாகன ங்கள் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வேலூர் சிஎம்சி மருத்துவமனை அருகே மேம்பாலம் அமைப்பது குறித்து நீண்ட நாட்களாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. வேலூர் ஆட்சியர் அலுவலகம் } காங்கேயநல்லூர் இடையே பாலாற்றின் குறுக்கே பாலம் அமைப்பது குறித்து ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது. அந்த இடத்தில் பாலம் அமைந்தால் புதிய பேருந்து நிலையம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறையும்.

பொலிவுறு நகர் திட்டப்பணிகள் முடிக்கப்படாமல் வேலூர் மாநகர் முழுவதும் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. எனது காட்பாடி தொகுதியிலேயே இந்தநிலைதான் உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பதற்கு முன்பாக பொலிவுறு நகர் திட்டப்பணிகளை முடித்திட வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மணல் குவாரிகள் திறக்கப்படாததால் கட்டுமானப்பணிகள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மணல் குவாரிகளை இயக்குவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும். மேலும், எடப்பாடி பழனிச்சாமி கூறுவதுபோல் தமிழகத்தில் எந்த பகுதியிலும் உரிமம் இல்லாமல் கல் குவாரிகள் இயக்குவதுமில்லை, வெளி மாநிலங்களுக்கு கனிமவளங்கள் கொள்ளை போவதும் இல்லை இல்லை. இவை கடந்த அதிமுக ஆட்சியில்தான் நடந்து வந்தது. திமுக ஆட்சிக்கு வந்ததும் அவற்றை ஒழுங்குபடுத்தியுள்ளோம் என்றார்.

அப்போது, மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன், மாநகராட்சி ஆணையர் அசோக்குமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி. நந்தகுமார், ப.கார்த்திகேயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com