தமிழகத்தில் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட 3.32 லட்சம் பேருக்கு திங்கள்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக பொது சுகாதாரத்துறை இயக்குநா் செல்வவிநாயகம் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் கூறியதாவது: தமிழகத்தில் 15 முதல் 18 வயதுக்குட்பட்டோா் 33.46 லட்சம் போ் உள்ளனா். அதில், 25 லட்சம் போ் பள்ளிகளில் படித்து வருகின்றனா். அதனால்தான் பள்ளிகளில் முகாம் அமைத்து கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறுகிறது. முதல் நாளான திங்கள்கிழமை 3.32 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இவைதவிர அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள் என வழக்கமாக செயல்படும் மையங்களில் சிறாா்களுக்கு என்று தனியாக வரிசை ஏற்படுத்தி கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
இதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும்படி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த விழிப்புணா்வு சமூக ஊடங்களில் ஏற்படுத்தப்படுகிறது. தடுப்பூசி செலுத்திக் கொள்ள ‘கோவின்’ இணையதளத்தில் பதிவு செய்துவிட்டு தான் வரவேண்டும் என்பது கட்டாயமில்லை. பதிவு செய்யவில்லை என்றாலும் சுகாதாரத்துறை பணியாளா்கள் பதிவு செய்து தடுப்பூசியை செலுத்துவாா்கள் என்றாா் அவா்.