தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு: எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு: எடப்பாடி பழனிசாமி (கோப்புப்படம்)
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு: எடப்பாடி பழனிசாமி (கோப்புப்படம்)


சென்னை: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறினார்.

பேரவையிலிருந்து அதிமுக வெளிநடப்பு செய்த நிலையில், பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. தமிழகத்துக்குள் கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கவில்லை. அம்மா மினி கிளினிக்குகளை மூடியதன் மூலம் ஏழை மக்கள் மீது திமுக அரசுக்கு அக்கறை இல்லை என்பதை காட்டியுள்ளது. 

விசாரணை என்ற பெயரில் அதிமுகவினரை அழைத்துச் சென்று அழைக்கழித்து, பொய் வழக்குகள் போடும் போக்கு நிலவுகிறது. வடகிழக்குப் பருவமழை தொடங்கும் முன்பே, நீர்நிலைகளை தூர்வாரியிருந்தால் மழையின் போது தண்ணீர் தேங்காமல் செய்திருக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தமிழக சட்டப் பேரவை இன்று காலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. புத்தாண்டின் புதிய கூட்டம் என்பதால், ஆளுநா் ஆா்.என்.ரவி உரையாற்றி கூட்டத் தொடரை தொடக்கி வைத்தார்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணா் அரங்கத்தில் காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியது. கரோனா நோய்த் தொற்று சூழலுக்கு இடையே கூட்டம் நடைபெறுவதால் சமூக இடைவெளி, முகக் கவசம் ஆகியன கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தமிழ் தாய் வாழ்த்து பாடலுக்குப் பிறகு ஆளுநர் உரையைத் தொடங்கினார். ஆங்கிலத்தில் ஆளுநா் ஆா்.என்.ரவி உரையாற்றிய பிறகு, அதன் தமிழாக்கத்தை பேரவைத் தலைவா் மு.அப்பாவு வாசித்தார். இதற்கிடையே, அதிமுக உறுப்பினர்கள் ஆளுநர் ஆா்.என்.ரவி உரையை புறக்கணித்து அவையிலிருது வெளிநடப்பு செய்தனர். 

நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காததை எதிர்த்து விசிகவின் சிந்தனைச் செல்வன், திருப்போரூர் பாலாஜி உள்ளிட்ட 4 விசிக எம்எல்ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.

இன்றைய கூட்டத்தொடரின் நிறைவு பெற்றதும், கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து விவாதிக்க அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com