நீட் தேர்வு விலக்கு குறித்து நாளை மறுநாள் (ஜன.8) ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நீட் தேர்வுக்கு மத்திய அரசு விலக்கு அளிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
அப்போது, எந்தவொரு நுழைவுத்தேர்வு என்றாலும் அது ஏழை, எளிய மாணவர்களை பாதிக்கும். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் கல்லூரி மாணவர் சேர்க்கையை நடத்துவதில் அரசு உறுதியாக உள்ளது.
நீட் தேர்வுக்கு விலக்கு மசோதா பற்றி கடிதம் கொடுக்க அனைத்து கட்சி எம்.பி.க்களை சந்திக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரம் கொடுக்கவில்லை. நீட் தேர்வு என்பது கூட்டாச்சி தத்துவத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ளது.
நீட் விலக்கு தொடர்பாக ஜனவரி 8 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும். போராட்டத்தின் மூலமாகவே அனைத்து உரிமைகளையும் நாம் பெற்றுள்ளதால் நீட் போராட்டமும் தொடரும் என்றார்.
தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென மத்திய அரசிடம் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.