கல்வி நிறுவனங்களின் அருகில் போதைப் பொருள்களின் விற்பனையைத் தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநா் உரையில் கூறப்பட்டுள்ளது
ஆளுநா் உரையில் கூறியிருப்பது:
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை திறம்பட நிலைநாட்டுவதற்கு தமிழக அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. பெருநகர சென்னை பகுதியில் காவல் துறையின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கு, ஆவடியிலும், தாம்பரத்திலும் இரண்டு புதிய காவல் ஆணையரகங்களை அரசு தொடங்கியுள்ளது.
கரோனா காலத்தில் திறம்படப் பணியாற்றிய காவல்துறையினரின் சேவைகளைப் பாராட்டும் வகையில், 1.17 லட்சம் காவல் துறையினருக்கு தலா ரூ.5 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு தமிழக அரசின் தலையாய கடமையாகும். குழந்தைகளின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்காக, குறிப்பாகக் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் நோக்கத்துடன், தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை 2021-யை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கல்வி நிறுவனங்களின் அருகில் போதைப் பொருள்களின் விற்பனையைத் தடுப்பதற்கு, கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது.