அம்மா உணவகம் மூடப்படக்கூடாது என்பதே அரசின் எண்ணம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று பதிலுரை அளித்து வருகிறார். இதில் தமிழக அரசு செயல்படுத்திய திட்டங்கள் குறித்தும் பல புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டு வருகிறார்.
அப்போது, 'அம்மா மினி கிளினிக்குகளை மூடிவிட்டோம், ஆனால் அம்மா உணவகத்தை கவனிக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பட்டியலை படித்தார். இதுபோன்ற பட்டியல் என்னிடம் நிறையவே இருக்கிறது.
அம்மா உணவகங்கள் மூடப்படக்கூடாது என்பதே அரசின் எண்ணம். என்னுடைய நிலைப்பாடும் அதுவே. கடைசிவரை இதே உறுதியில் இருப்பேன். அதனாலே ஆட்சிக்கு வந்தவுடன் அம்மா உணவகங்கள செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் முந்தைய திமுக அரசின் திட்டங்களை புறக்கணித்ததுபோல் நாங்கள் அதிமுக திட்டங்களை புறக்கணிக்க மாட்டோம்' என்று தெரிவிதத்தார்.
தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுவது குறிப்பிடத்தக்கது.